Nov 6, 2017

53. சிவா

சிவா - சிவம் என்னும் பரம மங்கள வடிவினள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


சிவ என்பது பரமேஸ்வரனை குறிக்கும். சிவா அம்பிகையை குறிக்கும். சிவம் என்று சொல்வதற்கும் சிவன் என்பதற்கும் சிறிது வித்தியாசம் உண்டு. சம்ஹார தொழிலுக்கு அதிபதியான ருத்ரன் அம்சமாக விளங்கும் கடவுளை தான் சிவன் என்கிறோம்.

ஆனால் ஸ்ரீவித்யா உபாஸனை படி சிவம் என்றாள் பரம்பொருள். அதாவது நிர்குண ப்ரம்மம், மங்களம். அதற்கு நிறமோ, வடிவமோ கிடையாது. அனைத்திலும் பரந்து, விரிந்து எந்தவித குணமும் இல்லாமல் உள்ள பரம்பொருளுக்கு தான் சிவம் என்று பெயர்.

அவ்வாறு எந்த சலனமும், குணமும் இல்லாத நிர்குண ப்ரம்மமான சிவம் இந்த உலகை ஸ்ருஷ்டிக்கவும், ஜீவன்களுக்கு ஓர் ஆதாரத்தை தர வேண்டும் என்பதற்காகவும், தன்னிடத்தில் இருந்து அம்பாள் வடிவை உண்டு பண்ணுகிறது. அவ்வாறு ஜகத்தை ஸ்ருஷ்டிக்க ஆசைப்பட்ட பரம்பொருளான சிவம், காமேஸ்வரன். அந்த ஆசையின் வெளிப்பாடகத் தோன்றிய வடிவம் காமேஸ்வரியான லலிதாம்பிகை.

லலிதாம்பிகை சிவம் என்னும் பரம மங்களமான குணங்களை உடையவள். "யதா சிவஸ்தா தேவி; யதா தேவி ததாசிவ:" என்கிறது லிங்க புராணம். அதாவது எந்த வடிவம் இறைவனோ அந்த வடிவம் சக்தியும் ஆவாள். சிவனிற்கும் சக்திக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை. அறியாமையினால் வேறு என்று கருதுகிறோம். சிவன் சக்தி இருவருமே ஒரே வடிவத்தினை உடையவர்கள் தான்.

இவ்வாறு சிவனின் வடிவமாகவும், மங்கள வடிவினளாகவும் லலிதாம்பிகை இருக்கிறாள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "சிவா" என்று போற்றுகின்றனர்.

இந்த நாமாவை கூறி தினமும் அம்பிகையை தியானித்து வருபவர்  எல்லாவித மங்களங்களையும் பெறுவார்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Oct 28, 2017

52. சிவ காமேஸ்வராங்க ஸ்தா

சிவ காமேஸ்வராங்க ஸ்தா - காமேஸ்வரராகிய சிவனின் மடியில் வீற்றிருப்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha



அம்பிகையின் இருப்பிடம் இந்த நாமாவில் கூறப்பட்டிருக்கிறது. லலிதாம்பிகை காமேஸ்வரராகிய சிவனின் இடது தொடையில் அமர்ந்திருக்கிறாள். இவ்வாறு தேவி அமர்ந்திருப்பது சகுண வடிவம். சிவன் பிரகாச வடிவம் அதாவது ஒளியுடைய வடிவம். சக்தி சிவனுடைய  விமர்ச வடிவம்.  அதாவது ஒளியின் அசைவாக சக்தி இருக்கிறாள்.

தேவி லலிதாம்பிகை சிவனின் இடது தொடையில் அமர காரணம் இதயம் இடதுபுறத்தில் இருப்பதால் தான். இன்னும் சொன்னால், சிவனின் இதயமே அம்பிகை தான். 

சிவா என்றால் மங்களம் என்று பொருள். ஈஸ்வரன் என்றால் அனைத்தையும் ஆள்பவர் என்று பொருள். மேலும், காமம் என்றால் அழகு, ஆசை, மன்மதன் என்பனவற்றை குறிக்கும். காம என்றால் அறிவு என்றும் குறிக்கும். அறிவு என்பது சிவனுடைய ஒரு வடிவம். இதயத்தினாலும் மனதாலும் அறியப்படுவது அறிவு. சக்தி இதயமாக இருந்து நமக்கு ஞானமாகிய அறிவை வழங்குகிறாள். இந்த ஜகத்தை சிருஷ்டிக்க ஆசைப்பட்ட சிவம் தான் காமேஸ்வரன். அந்த ஆசையின் வெளிப்பாடாகத் தோன்றியவள் தான் காமேஸ்வரி. இந்த நாமத்தில் சகுண ப்ரம்மத்தின் அனைத்து தன்மைகளும் விளக்கப்படுகிறது.

சிவகாமேஸ்வனாக உள்ள தனது பர்த்தாவின் திருத்தொடையில் வீற்றிருக்கிறாள். இதை தான் வாக்தேவிகள் "சிவ காமேஸ்வராங்க ஸ்தா" என்று அம்பிகையை போற்றுகின்றனர். இவ்வாறு இந்த வடிவத்தில் லலிதாம்பிகையை தியானம் செய்வது உயர்ந்த முறை. 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Oct 21, 2017

51. ஸர்வாபரண பூஷிதா

ஸர்வாபரண பூஷிதா - எல்லாவித அணிகலன்களாலும் அலங்கரிக்கப் பெற்றவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


நவரத்தின கிரீடம், காதில் தாடங்கம், மூக்கில் மூக்குத்தி, பொன்னால் ஆன கேயூரம், கைகளில் மங்கள ஒலி எழுப்பும் வளையல்கள், பத்து விரல்களிலும் மோதிரம், கழுத்தில் தாலி, நவரத்தினம் பதித்த அட்டிகை, முத்து மாலைகள், பலவிதமான மாலைகள், ஓட்டியாணம், நவமணிகளால் ஆன சலங்கைகள் என்று பலவித ஆபரணங்கள் அணிந்திருக்கிறாள் லலிதாம்பிகை.

குறைவற்ற அழகான அங்க அமைப்பை உள்ள தேவிக்கு எல்லா ஆபரணங்களும் மேலும் அழகூட்ட முயற்சி செய்கின்றன. ஆனால் அவற்றால் முடியவில்லை. அம்பிகை அதை அணிந்ததால் ஆபரணங்கள் அழகு பெற்று கொண்டிருக்கிறது.

தேவியணியும் பல ஆபரணங்கள் சூடாமணி முதல் பாதாங்குலீயகம் வரை கல்பஸூத்ரம், காளிகா புராணம் முதலியவைகளில் கூறப்பட்டுள்ளன.
காளிகா புராணம், அன்னை 40 விதமான ஆபரணங்களை தரித்துக் காட்சிக் கொடுபாள் என்று கூறுகிறது. மேலும், மஹிஷாசுரனை சம்ஹரிக்க காளியை தேவர்கள் ஆவாகனம் செய்யும் போது, விஸ்வகர்மாவும் குபேரனும் அவளுக்கு பல ஆபரணங்களையும் கொடுத்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தேவி சகலவிதமான ஆபரணங்களை அணிந்திருக்கிறாள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை " ஸர்வாபரண பூஷிதா " என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Oct 11, 2017

50. அநவத்யாங்கி

அநவத்யாங்கி - குற்றம் குறை ஒன்றும் இல்லாத அங்கங்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா



நிர்குண ப்ரம்மம் ( குணங்கள் இல்லாத ), சகுண ப்ரம்மம் ( குணங்கள் உடைய ) ஆகிய இரண்டும் தேவியின் வடிவம் தான். சகுண ப்ரம்மத்தை பற்றி அறியும் போது குணமும், வடிவமும் கூறப்படுகிறது. இங்கு சகுண ப்ரம்மமான தேவியின் உருவத்தை அறிகிறோம். ப்ரம்மம் பூரணமானவையாதலால், தேவியின் அங்கங்கள் அனைத்தும் பூரணமானவை. குறை இல்லாதவை.

அம்பிகை குறை காண இயலாத வடிவம் உடையவள். எல்லாவிதமான லக்ஷணங்களோடும் கூடிய அழகிய அவயங்களை கொண்டவள். தேவியின் அனைத்து அங்கங்களும் சாமுத்ரிகா லக்ஷண சாஸ்த்திரத்திற்கு அமைய பூரணம் ஆனவை.

அவள் அழகே உருவானவள். எந்த பக்ஷணமானாலும் அதற்குத் தித்திப்பைத் தருவது சர்க்கரை என்கிறமாதிரி, நாம் எங்கெங்கே எந்தெந்த அழகைக் கண்டாலும் அதையெல்லாம் அழகாக்கும் தாய் அவள்தான். பிரம்ம சக்தியான அவளுடைய பூரண அழகின் துளித்துளிதான் மற்ற அழகுகளிலெல்லாம் தெறித்திருக்கிறது. இப்படிப்பட்ட பூரண அழகில் எவ்வாறு குறை இருக்க முடியும்? அழகின் பூரணமே அம்பிகை தான்.

இவ்வாறு கேசாதி பாதம், பாதாதி கேசம் என்று எப்படி பார்த்தாலும் எந்த ஒரு அங்கத்திலும் குறை காண முடியாத அழகான வடிவம் உடையவள் லலிதாம்பிகை என்பதை தான் வாக்தேவிகள் "அநவத்யாங்கி" என்று அம்பிகையை போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

49. ஸர்வாருணா

ஸர்வாருணா - எல்லாம் சிவப்பாகவே இருப்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha


பொதுவாக பரமாத்மாவுக்கு எந்த குணமோ, நிறமோ, வடிவமோ கிடையாது. அவ்வாறு எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மா தன்னை ஒரு சிறிய வடிவத்துக்குள் சுருக்கிக் கொண்டு உலகினை படைக்கிறார். இந்த உலகையும், அதில் வாழ ஆத்மாக்களையும் படைக்க பரமாத்மா பெண் வடிவமாக மாறிக்கொண்டது. அப்படி மாற்றி கொண்ட வடிவம் தான் லலிதாம்பிகை.

இவ்வாறு சிருஷ்டிக்கான செயல் வடிவில் தேவி வருகிறதால், அந்த வடிவில் வரும் போது அவள் கருமை நிறமாக வர முடியாது. காரணம் கருமை தாமஸத்திற்கான நிறம். தோன்றுவதற்கான நிறத்தில் வர வேண்டும் என்பதாலும், இந்த பூமியின் மீது வைத்த கருணையாலும் அம்பிகை அருண நிறத்தவளாக வந்தவள் தான் லலிதாம்பிகை.

மேலும், கருணையின் நிறம் சிவப்பு. அம்பிகையோ கருணையின் மொத்த உருவம். ஆக அம்பிகைக்கு எல்லாம் சிவப்பாகவே திகழ்கின்றது. சிவப்பு என்றால் அடர் சிவப்பல்ல; வெளிர் சிவப்பு. அதாவது சூரியன் உதிக்கின்ற நிறம். அடர் சிவப்பு சிறிது உக்கிரமானது. அது ராஜஸம் குடிக்கொண்ட நிறம். ராஜஸம் இருக்கும் போது மென்மையான தொடக்கம் இருக்க இயலாது. ஆனால் வெளிர் சிவப்பு தோற்றத்திற்கான நிறம்.

ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில்(93) "கருணா காசித் அருணா" என்கிறார். அதாவது, தேவியின் கருணை சிவந்த வர்ணமுள்ளதாகவும், அதனை சாதாரண அறிவால் அறிய முடியாததாகும் என்று கூறுகிறார்.

ஆக அம்பிகையின் திருமேனி, அவள் அணிந்துள்ள ஆடைகள், ஆபரணங்கள், பூமாலைகள், கற்பூர வீடீகம் போட்டு சிவந்த உதடுகள், அவள் வீற்றிருக்கும் சிம்ஹாசனம், ஆயிரம் இதழ் தாமரை, பட்டு மெத்தைகள், மேல் விரிப்புகள், பிரகாசம் என அனைத்தும் சிவப்பு நிறமானவைகள் தான்.

எல்லாம் சிவந்த நிறமாக லலிதாம்பிகை திகழ்வதால் தான் தேவியை வாக்தேவிகள்  "ஸர்வாருணா" என்று வர்ணிக்கின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Sep 13, 2017

48. மஹா லாவண்ய ஷேவதி:

மஹா லாவண்ய ஷேவதி: - பேரழகுகளின் பொக்கிஷமானவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸



லலிதா


அம்பிகை அழகுக்கெல்லாம் அழகு. எல்லாரிடத்திலும், எல்லாப் பொருள்களிலும் உள்ள அழகெல்லாம் அம்பிகையின் அழகில் இருந்து தான் பெறப்படுகின்றது. அப்போதும் தேவியின் அழகு குறைவதில்லை. காரணம் அம்பிகை பூரணமானவள். பூரணத்திலிருந்து  எவ்வளவு எடுத்தாலும் குறைவு ஏற்படாது.

அம்பிகையின் அங்கங்களின் அழகை ஒவ்வொன்றாக விவரித்துப் பார்த்தாலும் முழுமையாக சொல்ல முடியவில்லை. அனைத்து அழகுகளும் சேர்ந்து ஓரிடத்தில் பொருந்தி குடியிருந்தால் எப்படி இருக்குமோ, அவ்வாறு அழகின் பொக்கிஷமாக, களஞ்சியமாக விளங்குகிறாள் லலிதாம்பிகை. நேராக ரூபத்தை வர்ணிக்க முடியாவிட்டாலும் ஒப்பிட்டாவது காட்டலாமா என்று பார்த்தால் அதற்கு உவமை காட்டும்படியாகவும் உலகத்தில் எதுவுமேயில்லை.

தேவியின் முழு ரூபத்தையும் எந்த கவிகளாலும் சொல்ல முடியவில்லை. பல பக்த கவிகள் தேவியை தர்சனம் செய்து தான் இருக்கிறார்கள். ஆனாலும் ஸம்பூர்த்தியாக எவரும் தன்னைப் பார்க்க விடாமல் ஏதோ கொஞ்சம், க்ஷண காலம்  மின்னல் மின்னுகிற மாதிரி தர்சனம் கொடுத்து விட்டு மறைந்து போய் விடுவாள். ஒரே பக்தியாக அவளிடமே மனசை அர்ப்பணித்தவர்களுக்கும் கூட அவளுடைய சரணாரவிந்தம், கடாக்ஷத்தைப் பொழியும் நேத்ரம், மந்தஸ்மிதம் செய்யும் திருவாய் என்றப்படி ஏதாவது ஒரு அவயம் தான் எப்போதும் கண்களில் கட்டி நிற்குமே தவிர கேசாதி பாதம் முழு ரூபமும் இல்லை.

ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் அம்பிகையை "படைக்கும் கடவுள்  பிரம்மாவினால் கூட உன்னுடைய பேரழகை வருணிக்க முடியவில்லை. தேவ கன்னியர்களும் உனது அழகை காண ஏங்குகின்றனர். சிவத்தினுடன் கலந்த அந்த வடிவம் பெரும் தவத்தாலும் அடைய முடியாது." என்று போற்றுகின்றார்.

ஆக எவ்வளவு வர்ணித்தாலும் அவளுடைய கேசம் முதல் பாதம் வரை உள்ள முழு உருவ அழகையும் எவராலும் இப்படித்தான் என்று கூற இயலாது. உலகில் உள்ள அனைத்து அழகுகளும் அம்பிகையிடம் இருந்து எடுத்தாலும் குறைவு படாத அழகு பொக்கிஷம் லலிதாம்பிகை என்பதை தான் வாக்தேவிகள் "மஹா லாவண்ய ஷேவதி:" என்று அம்பிகையை போற்றுகின்றனர்.

நாம் பார்க்கும் திசை தோறும் தேவியின் அவையங்களாக தெரியும் படியாகவும், அம்பிகையின் முழு ரூபத்தையும்,  த்யானம் செய்ய முயன்று, இறுதியில் சாயுஜ்ய பதவியை அடைவோம்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

47. மராளி மந்த கமநா

மராளி மந்த கமநா - ஹம்ஸம்(அன்னம்) போன்ற மென்மையான மெதுவான நடை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha


ஹம்ஸம் என்றால் அன்னப்பக்ஷி. பெண்களின்  நடை அழகுக்கு அதிகபட்ச உவமையாக அன்னப்பறவையை கூறுவது உண்டு. அம்பிகையின் நடையோ அன்னப்பறவையை விட அழகானது. தேவி யாக குண்டத்தில் இருந்து வெளிப்பட்டு தேவர்களை நோக்கி நடந்தாள். அப்போது அவளுடைய நடை அன்னப்பறவையை விட மிக அழகாகவும், மெதுவாகவும் இருந்ததாம்.

அன்னப்பறவை, தேவியின் நடை அழகைப் பார்த்து தானும் அதுப்போல நடக்க முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனவாம். அவளுடைய சரணங்கள்  கருணைக் கொண்டு அந்த அன்னப்பறவைகளுக்கு கற்று கொடுக்கின்றதால் தான் அன்னப்பக்ஷிகள் நடக்க முயற்சி செய்கின்றதாம்.

ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் அம்பிகையை "தாயே !  உன்னுடைய  அழகான நடையினைப் பார்த்து, தானும்  அதைக் கற்றுக் கொள்ள நினைத்து, உன் வீட்டிலுள்ள அன்னப்பட்சிகள்,  துள்ளித்துள்ளி நடந்து , உன் அழகு  நடையைப் பின்பற்றி, உன்னைப் போல்  தானும் நடக்க பழக்கப் படுத்திக் கொள்கின்றன. நீ நடக்கும் பொழுது உன்  தண்டையிலுள்ள பத்மராகக் கற்கள்  எழுப்பும் ஓசையானது, அந்த அன்னப்பக்ஷிகளுக்கு  மறைமுகமாக  நடப்பதற்குப் பாடம் சொல்லித் தருவது போல்  உள்ளது" என்று வர்ணிக்கிறார்.

இவ்வாறு அன்னையின் நடையே அன்னநடை என்பதை வாக்தேவிகள் "மராளி மந்த கமநா" என்று அம்பிகையை போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Sep 8, 2017

46. சிஞ்ஞாத மணி மஞ்சீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா

சிஞ்ஞாத மணி மஞ்சீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா - ஒளிரும் ரத்தின பரல்களை கொண்ட சிலம்புகளால் அலங்கரிக்கப்பட்ட பாதங்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


அம்பிகையின் சிலம்பு ஒளி வீசும் ரத்தினங்களால் ஆனவை. சிலம்பு, தண்டை, பாடகம், கொலுசு போன்றவை மங்கள ஒலியை எழுப்புபவை. பெண்கள் நடக்கும்பொழுது ஒருவித இனிய ஒலியை எழுப்பும்.

ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்பவல்லது சிலம்பு. அவள் ஆட்டத்தில் எழும் ஒலியாலே, இந்த பிரபஞ்சத்தை உருவாக்குகிறாள் அம்பிகை.

வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். வெள்ளி நகைளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அதனால், வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது. எனவே, பெண்கள் கொலுசு அணிய வேண்டும் என்று காட்டுகிறாள் அம்பிகை.

அவள் சிலம்பின் ஒலி பக்தர்களின் துன்பங்களை விரட்டும். மங்களத்தை வழங்கும். இவ்வாறு தேவி அணிந்திருக்கும் சிலம்பு ஒளி வீசிக் கொண்டிருக்கிறது என்பதை தான் வாக்தேவிகள் "சிஞ்ஞாத மணி மஞ்சீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

45. பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா

பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா - தாமரையை மதிப்பிழக்க செய்யும் ஒளி நிறைந்த பாதங்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா



அம்பிகையின் இரு பாதங்களில் செவ்வொளி வீசுகிறது. அதனால் தாமரைப் பூக்கள் தேவியின் இரண்டு பாதத்திற்கு முன் அழகின்றி காணப்படுகிறது. தாமரையைக் காட்டிலும் அழகாகவும், ம்ருதுவாகவும், சிவப்பாகவும் இருக்கின்றது தேவியின் திருப்பாதங்கள்.
அதுதான் நாம் போய் விழ வேண்டிய இடம்.   நம்மைப் பிடித்திருக்கிற கர்மா, ஜன்மா போய் மோக்ஷ வீட்டைப் பிடிக்க வேண்டுமானால் பாதத்தை தான் பிடிக்க வேண்டும்.

தாமரையிலிருந்து தேன் வழிகிற மாதிரி, தேவியின் திருவடித் தாமரையிலிருந்து காருண்யாம்ருதம் வழிகிறது. அம்பாள் வழிபாட்டைப் பின்பற்றும் ஒவ்வொருவருக்குமே, அவளுடைய திருவடி ஸகல ஸெளபாக்யங்களையும் கொடுக்கிறது. திருவடி திருவையே தருகிறது!

அம்பிகையின் திருவடி இரவு பகல் என்று பாராமல் எங்கே எந்த பக்தர்களுக்கு அநுக்ரஹ காலம் வந்தாலும் அங்கே ஓடி அவர்களுக்கு அருள் செய்கிறது.  தேவியின் பாதத்தை பூஜிப்பவர்களுக்கு, தரித்திரம் நீங்கி, அளவற்ற ஸம்பத்துக்கள் வந்து சேரும். அவர்களுக்கு கர்ம வசத்தால் ஏற்படும் விபத்துக்களையும் நீக்கி விடுகிறது தேவியின் திருவடி.

வேதம் பிறந்தது தேவியின் பாத தூளிகளில் தான். பரமேஸ்வரன், விஷ்ணு, ப்ரம்மா முதலிய தேவர்கள் அம்பிகையின் திருவடியில் விழுந்து பாத தூளிகையை பூஜை செய்து தான் அவர்களின் தொழிலை (படைத்தல், காத்தல், அழித்தல்) செய்கிறார்கள்.  அத்திருவடி அஞ்ஞான இருட்டை போக்கி நல் ஞானத்தை கொடுக்குமாம். தேவியின் திருவடியின் மஹிமையை அளவிட முடியாதது.

அவள் காலடியில் விழுந்து சரணாகதி அடைந்தாலே போதும். அந்த சரணாகதியே மன இருளை அகற்றி மேதையாக்கி விடும். நுனி மரத்தில் உட்கார்ந்து அடிமரத்தை வெட்டும் அளவிற்கு அறியாமையால் கிடந்தவர் காளிதாசன். அவர் தேவியின் திருவடியை பிடித்து மாபெரும் கவியானார். அவர் பெற்ற அருளே இதற்கு சான்று.

அம்பிகையின் திருவடியை தியானிப்பவர்களுக்கு  தாரித்த்ரியம் நீங்கி, குபேரனுக்கு சமமாக ஆவார்கள்.

இவ்வாறு தேவியின் திருவடி தாமரையை பழிக்க செய்ததாக, வாக்தேவிகள் அம்பிகையை  "பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Aug 22, 2017

44. நகதீதிதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா

நகதீதிதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா - பாத நகங்களின் காந்தியை கொண்டு தன்னை நமஸ்கரிப்பவர்களின் தாமஸத்தை போக்குபவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha



அம்பிகையின் கால் நகங்கள் ஒளிப் பெற்று விளங்குகிறது. தேவர்களும் அசுரர்களும் வரம் வேண்டி ரத்தினங்கள் பதித்த, ஒளி பொருந்திய கிரிடங்களை உடைய தலையினை தேவியின் பாதங்களில் வைக்கும் போது,  தேவியின் பாத நகங்களில் இருந்து வெளிப்படும் ஒளியானது அந்த ரத்தினங்களின் ஒளியை மதிப்பிழக்க செய்கிறதாம். அந்த பாத நக ஒளியானது பக்தர்களின் தமோகுணத்தையும், அறியாமையும் போக்கும் வல்லமை உடையது.

அம்பிகையை யாரெல்லாம் நமஸ்காரம் செய்கிறார்களோ , அவர்களுக்கெல்லாம் அவள் ஞானத்தை அருள்கிறாள். தேவியை ப்ரம்மா, விஷ்ணு, சிவன், தேவாதி தேவர்கள் என்று எல்லோரும் நமஸ்கரிக்கிறார்கள்.

லலிதாம்பிகை வர - அபய கரங்களை கொண்டிருப்பதில்லை. இதை ஏற்கனவே சிந்தித்துள்ளோம். அவள் திருவடியில் இருக்கும் நகங்களே பக்தர்களின் விருப்பத்தை(வரம்) தருகிறது. அவர்களின் பயத்தையும்(அபயம்) போக்குகிறது.

ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "தாயே! உன் கால் விரல்களின் நகங்கள்,  உன்னை வணங்க வருகின்ற வானவர்களின் மணிமுடிகளிலுள்ள மாணிக்கம்,  ரத்தினம்  போன்ற சாணைக் கற்களால் தீட்டப்பட்டு  இரும்பு கூர் போல்  இருக்கிறது." என்கிறார். மன்மதன் பரமேஸ்வரரை நோக்கி மலர் அம்புகள் விட்டு, அந்த ஐந்து பாணங்களும் உடையப்பட்டது. மன்மதன் தன்னிடமுள்ள ஐந்து பாணங்களைக் கொண்டு பரமேஸ்வரரை வெல்ல முடியாமல், மற்றொரு ஐந்து பாணங்களையும் தன்னுடைய தபோ மஹிமையால் தேவியின் கடாக்ஷத்தால் அவன் சம்பாதித்துக் கொண்டானோ என்று வர்ணிக்கிறார். அம்பிகையின் இரு பாதங்களில் உள்ள பத்து விதமான நகங்கள் மன்மதனுடைய பாணங்களின் நுனி பாகம் என்று கூறுகிறார் ஆதிசங்கரர்.

மேலும், தேவியின் பாத நகங்களின் காந்தியானது அநேக சந்த்ர கிரணங்கள் போல் விளங்குகிறது. சந்திரனைக் கண்டால் தாமரைப் புஷ்பங்கள் மூடிக் கொண்டுவிடும். அதுபோல தேவ ஸ்திரிகள்  அவர்களது கையை மூடி  தேவியை நமஸ்கரிக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது தேவ ஸ்திரிகளின் கைகள் பத்மத்தை போலவும், தேவியின் நகங்களின் காந்தி சந்திரன் போலவும், நககாந்தியாகிய சந்திரனைக் கண்டவுடன் தேவ ஸ்த்ரிகளுடைய கைகளாகிய பத்மம் மூடிக்கொண்டதோ என்று ஆதிசங்கரர் வர்ணிக்கிறார் தேவியின் நக காந்தியை.

அம்பிகையின் கால் நகங்களை த்யானிப்பதன் மூலம் அறியாமை என்னும் இருள் விலகும். இவ்வாறு தேவியின் பாத நகங்களின் காந்தியை "நகதீதிதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா" என்று வாக்தேவிகள் அம்பிகையை வர்ணிக்கின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

43. கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதாந்விதா

கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதாந்விதா - ஆமையின் முதுகு ஓட்டை வெல்லுகின்ற புறங்கால்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha
லலிதா


கூர்மம் என்றால் ஆமை.
அம்பிகையின் பாதத்தின் மேல்பாகம் பள்ளம் மேடு இல்லாமல், ஆமையின் முதுகின் வளைவுகளை விட அழகு வாய்ந்ததாக இருக்கின்றதாம்.

பொதுவாக ஆமையின் முதுகு எத்தகைய சுமையையும் தாங்கும் வலிமை உடையது. அதுபோல, அம்பிகையின் திருவடியின் மேல்பாகமானது அடியார்களின் சுமைகளை தாங்குகிறது. அதனால் தான் ஆமை ஓட்டினை ஒப்பிடுகிறார்கள் வாக்தேவிகள்.

ஆமையின் முதுகு ஓடு கடினமானதாக இருக்கும்.  தேவியின் புறங்கால்கள் ஆமையின் முதுகு போல வளைந்து இருந்தாலும், அவை மென்மையிலும் மென்மை வாய்ந்தவை. அடியார்களும், தேவர்களும், மும்மூர்த்திகளும் வணங்கும் திருவடி. எல்லையற்ற கருணையுடைய  அத்திருவடிகள் மிகவும் மென்மையாக உள்ளனவாகத்தான் இருக்கும்.

தேவியின் பாதங்களின் முன்பாகம் அவள் அடியார்களைக் காக்கின்றாள் எனும் புகழுக்கு உறைவிடமாகும். அடியார்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கு இடமளிக்காமல் இருக்கிறது என்ற பெருமை அவற்றிற்கு உண்டு.

ஆனால் ஆதிசங்கரரோ அம்பிகையின் புறங்கால்களை ஆமையின் ஓட்டோடு ஒப்பிட கூட மறுக்கிறார். காரணம், ஆமை ஓட்டின் கடினத்தன்மை. அவர் சௌந்தர்யலஹரியில் "தாயே !  பக்தர்களுக்கு  உயர்வைகொடுக்கக்  கூடியதும் ,  அவர்களது துன்பங்களைப்  போக்கக்கூடியதுமான, பெருமையுடைய  உன் மென்மையான  பாதநுனியைப்  பிடித்து ,  உன் பாதத்தின் மென்மையை அறிந்த சிவனும் அளவற்ற ஆசையுடன் திருமணநாளன்று, எப்படித்தான் கடினமான  கருங்கல் அம்மிமீது வைத்தாரோ ?  கவிகளும்  இந்த மென்மையான பாதங்களின் மேல்பாகத்தை ஆமை முதுகு ஓட்டிற்கு  உவமையாகக்  எப்படித்தான்  கூறினாரோ" என்று கூறுகிறார். இதில் இருந்து இந்த லலிதா சகஸ்ரநாமம் சௌந்தர்யலஹரியை விட பழமையானது என்பது புலப்படுகிறது.

இவ்வாறு தேவியின் பாதத்தின் மேல்பாகமானது ஆமையின் முதுகு ஓட்டை விட அழகானது என்பதை "கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதாந்விதா" என்று வாக்தேவிகள் அம்பிகையை போற்றுகின்றனர். மேலும் தேவியின் திருவடியின் மேல் பகுதியான புறங்கால்களை த்யானம் செய்வதால் புலனடக்கம் உண்டாகும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

42. கூடகுல்பா

கூடகுல்பா - வெளியில் தெரியாமல் மறைந்திருக்கும் அழகிய உருண்ட கணுக்கால்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


அம்பிகையின் கணுக்கால்களின் எலும்பு, மேலே முட்டாகத் தெரியாமல், சற்று சதை பிடிப்பு உள்ளனவாய் இருக்கின்றதாம்.
கணுக்கால்கள் வலுவின்றி மெலிந்து விடாமல் சதைகளால் மூடப்பட்டு உருண்டு அழகுடன் விளங்குகிறது.

அன்னையின் திருவடியை அடியார்கள் யாவரும் நன்றாக கட்டியாக பிடித்துக் கொள்வதற்கு ஏற்ப, அவள் திருவடியில் உள்ள கணுக்கால் குறைவின்றி, நிறைவாக சதைப் பகுதியாகவே அழகாகக் காட்சிக் கொடுக்கிறது.

மேலும், பக்தன் தன் காலை பிடிக்கும் போது  தன்னுடைய எலும்பை பிடித்தால் அது வலிக்கும் எனக் கருதி, சதையாக கொண்டுள்ளாள். இதில் அன்னையின் கருணை மறைந்துள்ளது. அதுவே, உருண்டையாக அழகாக சிவந்து இருக்கிறது என்று நினைக்கிறேன்.

அம்பிகையின் கணுக்கால்களை தியானம் செய்வதன் மூலம் நிறைவான வாழ்க்கைக் கிட்டும்.

இவ்வாறு வாக்தேவிகள் அம்பிகையை “கூடகுல்பா "என்று கணுக்காலினை வர்ணிக்கின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Aug 12, 2017

41. இந்த்ர கோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா

இந்த்ர கோப  பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா - இந்த்ர கோபங்கள் என்ற கார்காலத்து பூச்சிகள் மொய்க்கப் பெற்ற, மன்மதனின் அம்பாறாத் தூணிகள் போல் ப்ரகாசிக்கும் முன்னங்கால்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha



அம்புகளை வைக்க அம்பறாத்தூணி இருக்கும். அம்பறாத்தூணியானது அம்புகளை வைக்க தகுந்தாற் போல் மேலே பருத்தும், கீழே சிறுத்தும் காணப்படும். மன்மதன், அம்பிகை கையில் உள்ள அதே மலர் அம்புகளை தான் வைத்திருக்கிறான். அந்த மலர் அம்புகளை வைக்க உதவும் அம்பறாத்தூணியாக தேவியின் திருக்கால்கள் இருக்கின்றதாம்.

இந்த்ர கோபங்கள் என்பது மழைக்காலத்தில் பூமியில் உற்பத்தியாகிக் காலை நேரத்தில் அழகாகத் தரையில் ஊர்ந்துக் கொண்டிருக்கும் பூச்சிகள். அந்த பூச்சிகள் மன்மதனின் அம்பாறத் தூணிகளில் மொய்த்துக் கொண்டிருக்கிறதாம். அதாவது, மலர்கள் எங்கு இருக்கிறதோ அங்கு வண்டுகள் மொய்ப்பது போல, தேவியின் திருக்கால்களான அம்பறாத்தூணியில் இந்த்ர கோபங்கள் என்னும் பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருக்கின்றதாம்.

மேலும், இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "தாயே!  உன்னுடைய கனுக்கால்கள் பரமசிவனை வெற்றி  கொள்வதற்காக, மன்மதனால்  தயாரிக்கப்பட்ட  அம்பறாத்தூணிபோல்  தோன்றுகிறது" என்கிறார்.

அதாவது, மன்மதன் சிவபெருமானிடம் தோற்றுவிட்டக் காரணத்தால், ஈசனை வெல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அம்பிகை தன் குழந்தைகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள். அவ்வாறு குழந்தையான மன்மதன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய திருக்கால்களையே அவனுக்கு அம்பறாத்தூணியாகக் கொடுத்திருக்கிறாள். அதை மன்மதன் தனது படைக்கலமாகக் கொண்டு ஈசனை வென்று விட்டான் என்று வர்ணிக்கின்றார்.

இவ்வாறு கார்காலத்து பூச்சிகள் மொய்க்கும் அம்பறாத்தூணியாக அம்பிகையின் முன்னங்கால்கள் இருக்கின்றது என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "இந்த்ர கோப  பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜங்கிகா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

40. மாணிக்ய மகுடாகார ஜாநுத்வய விராஜிதா

மாணிக்ய மகுடாகார  ஜாநுத்வய   விராஜிதா - மாணிக்க மகுடம் போன்ற முழங்கால் சில்லுகளை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


அம்பிகையின் சில்லுகள் சற்றுக் கடினமாகவும், சிவந்தும் காணப்படுகிறது. அவை, காலின் நடுவில் மாணிக்கத் மகுடத்தை சூட்டியது போல் தோன்றுகிறதாம்.

அம்பிகை மஹா பதிவ்ரதை. அதனால் பரம பணிவோடு பதியான காமஸ்வரனை விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணிக் கொண்டே இருப்பவள். பெண்கள் காலை மடித்து காலின் நடு பாகம் பூமியில் படுகிற மாதிரி தான்  நமஸ்கரிப்பது வழக்கம். அப்படி ஓயாமல் ஒழியாமல் அம்பாளுடைய அந்த பாகம் பூமியில் உராய்ந்து காய்ப்புக் காய்த்துப் போய் தான் முட்டியானது கெட்டி பாகமாக ஆகிவிட்டதாம். அதனால், அந்த முழங்கால் சிவந்து மாணிக்க கல் போன்று ஆகிவிட்டதாம்.

இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் “பத்யு: ப்ரணதி கடிநாப்யாம்" அதாவது  "தாயே உன்  முழங்கால்கள்    உருண்டையாகவும், உன்  கணவனாகிய  பரமசிவனை ,  அடிக்கடிவணங்குவதால்  சற்று கடினமாகவும் உள்ளது அந்த முழங்கால்கள்" என்று  அம்பிகையை வர்ணிக்கிறார்.

வேதத்தை நமக்கு தந்ததும் அம்பிகைதான். அவ்வழி நடந்து காட்டவே , காலின் மத்ய பாகம் முட்டி என்பது கெட்டிப்படும் அளவுக்கு, பத்னி தர்மமாகப் பதியை நமஸ்கரிக்கிறாள்.

இவ்வாறு மாணிக்க கல்லால் செய்யப்பட்ட தொப்பிப்போல் உள்ளது அம்பிகையின் முழங்கால் சில்லுகள் என்பதை தான் வாக்தேவிகள் "மாணிக்ய மகுடாகார ஜாநுத்வய விராஜிதா" என்று தேவியை போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam




39. காமேச ஜ்ஞாத சௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா

காமேச ஜ்ஞாத சௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா - காமேசுவரரால் அறியப்பெற்ற அழகையும், ம்ருது தன்மையையும் உடைய இரு தொடைகளை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha


அம்பிகையின் தொடைகளின் அழகையும் ம்ருது தன்மையையும் அவளின் கணவனான காமேஸ்வரருக்கு மட்டுமே தெரியுமானது. வேறு எவராலும் அதை அறியமுடியாதாம்.

தேவியின் தொடையானது யானையின் துதிக்கைப் போல் மேல் பெருத்து வரவர சிறியதாக விளங்கி வருகிறதாம். இதை
ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "அம்மா !  வேதநாயகியே ! உன் தொடைகள் இரண்டும்,  யானைகளின் துதிக்கைகளையும் தங்கமயமான வாழைமரத் தண்டுளையும் விட ,  மிக அழகாக இருக்கின்றன" என்று போற்றுகின்றார்.

மேலும் தேவியின் தொடைகளை த்யானிப்பதன் மூலம் மென்மையும், சௌந்தர்யமும் கிட்டும். இவ்வாறு ல்ஜகதாம்பிகையின் தொடையின் சௌந்தர்யத்தை தான் வாக்தேவிகள் "காமேச ஜ்ஞாத சௌபாக்ய மார்தவோரு த்வயாந்விதா"  என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam




38. ரத்ன கிங்கிணி காரம்ய ரச நாதாம பூஷிதா

ரத்ன கிங்கிணி காரம்ய ரச நாதாம பூஷிதா - ரத்தின சலங்கையுடன் விளங்கும் அழகிய அரைஞான் அணிந்தவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


பெண்கள் இடையில் அணியும் அணிகலனுக்கு ஒட்டியாணம், மேகலை என்றெல்லாம் கூறுவர். அம்பிகையின் இடையில் உள்ள ஒட்டியாணம் தங்க மயமான கொடிகளைக் கொண்டது. இதில் அழகிற்காக மணிகளும் இரத்தினங்களும் தொங்கவிடப்பட்டிருக்கின்றது.

இந்த ஒட்டியாணத்தின் மணிகள் அசையும் போது கிண்கிண் என்ற இனிய ஓசையை எழுப்பும். இதனாலயே இவைகள் கிண்கிணி மணிகள் என்று சொல்லப்படுகின்றன.

ஆதிசங்கரரும் சௌந்தர்யலஹரியில் அம்பிகையை " க்வணத் காஞ்சி தாமா - சப்திக்கின்ற தங்க சலங்கையோடு கூடிய ஒட்டியாணத்தால் அலங்கரிக்கப்பட்டவள்" என்று போற்றுகின்றார். மேலும் தேவியின் ஒட்டியாணத்தை த்யானிப்பதன் மூலம் ஜீவாத்மா பரமாத்வோடு இணையும் வாய்ப்பு கிட்டும்.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை  " ரத்ன கிங்கிணி காரம்ய ரச நாதாம பூஷிதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam



37. அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ

அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ - சிவப்பு பட்டாடையால் ப்ரகாசிக்கின்ற இடை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா

அருணம் என்றாலே சிவப்பு. குசும்ப செடியின் சாற்றினால் பட்டாடைகளுக்கு சாயமேற்றுவது பழங்காலத்து முறையாகும். அவ்வாறு சாயமேற்றிய ஆடையை கௌஸும்ப வஸ்திரம் என்பர்.

அம்பிகை  தனது இடையினை சுற்றி அவ்வாறு இயற்கை பொருளால் சாயமேற்றிய சிவப்பு நிற பட்டாடையை உடுத்தியிருக்கிறாள். மேலும் அம்மையோடு சம்பந்தப்பட்ட  எல்லாமே சிவப்பு நிறத்துடனே உள்ளது.  ஏற்கனவே சொன்னது போல் சிவப்பு  கருணை, தயையின் அடையாளம். அவளே கருணையின் வடிவம். ஆகவே தான் அவள் 'ஶ்ரீ மாதா'என்று அறியப்படுகிறாள். அவளது முத்தொழிலான படைத்தல்,  காத்தல், அழித்தல் மூன்றுமே கருணையை அடிப்படையாக கொண்டவை.

லலிதாஸஹஸ்ர நாமம் வாக்தேவிகளான வசினி, காமேஸ்வரி, மோதினி, விமலே, அருணா, ஜயினி, ஸர்வேஸ்வரி, கௌலினி ஆகிய எட்டு பேர்களால் ஆக்கப்பட்டது. அருணா என்ற வாக்தேவி அம்பிகையின் இடையினை சுற்றியுள்ள சிவப்பு பட்டாடையால் குறிக்கப்படுகிறாள்.

 மேலும் அருணன் என்றால் சூரியன் . சூரியனின் நிறம் சிவப்பு. சூரிய ஒளி எல்லா ஜீவன்களுக்கும் ஜீவச் சக்தியை தருகிறது. ஆக, சிவப்பு நிறம் ஜீவசக்தியைக் குறிக்கிறது.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை "அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

36. ஸ்தநபார தலந்மத்ய பட்டபந்த வலித்ரயா

ஸ்தநபார தலந்மத்ய  பட்டபந்த  வலித்ரயா - ஸ்தனங்களின் கனத்தினால் இடை ஒடிந்து விடாமல் காப்பதற்குக் கட்டிய முப்பட்டைகளைப் போல் விளங்கும் மூன்று மடிப்புகளை வயிற்றில் உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


பெண்களின் வயிற்றில் மூன்று மடிப்புகள் காணப்படும். நெற்றி, கழுத்து, இடை ஆகிய பகுதிகளில் மூன்று கோடுகள் காணப்படுவது சாமுத்ரிகா லட்சணமாகும்.
இதன்படி அம்பிகையின் இடையில் மூன்று கோடுகள் காணப்படும்.

அம்பிகையின் ஸ்தன பாரத்தினால் மடியும் இடையினை தாங்கி கொள்வதற்கு, தங்கத்தினால் ஆன பட்டி அவளது வயிற்றில்  மூன்று மடிப்புகளை உருவாக்குகிறது போல் இருக்கிறது. கம்பு விரிசல் விட்டால், உடைந்து விடாமல் இருக்கக் கயிற்றால் கட்டு போடுவதுண்டு. அது போலவே அம்பிகையின் மெல்லிய இடை உடையாமல் இருக்க மூன்று கட்டுகள் போடப்பட்டது போல் விளங்குகிறது.

மேலும் ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியில் "தேவீ !  இந்த  ஸ்தனசுமையினால் உன்  இடுப்பு  ஒடிந்துவிழுந்துவிடப் போகிறதே என்று, உன் இடுப்பை வள்ளிக்  கொடிகளால் மூன்று சுற்றாக  சுற்றி  இருப்பது போல் தோன்றுகிறது" என்று வர்ணிக்கின்றார்.

இந்த நாமத்தின் உட்கருத்து, அம்பிகையின் எல்லையற்ற கருணையை அவளது மார்பின் பாரமாக உருவகப் படுத்தப்படுகிறது. மூன்று மடிப்புகள் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை குறிப்பிடுகிறது. அவளுடைய கருணைக்கான நேரம் மற்ற தொழில்களைவிட அதிகமானது. அவள் ஜகன் மாதா. அவளுடைய கருணையே மற்றதை விட அதிகம்.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை "ஸ்தநபார தலந்மத்ய  பட்டபந்த  வலித்ரயா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam


35. லக்ஷ்ய ரோம லதா தாரத ஸமுன்னேய மத்யமா

லக்ஷ்ய ரோம லதா தாரத ஸமுன்னேய மத்யமா - காணப்படுகின்ற  ரோம வரிசையான கொடிக்கு ஆதாரமானது இருக்க வேண்டுமென்று அநுமானம் செய்து அறியக்கூடிய இடையை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
லலிதா


பெண்களின் இடை மிகவும் மெலிந்து சிறியதாக இருப்பது சாமுத்ரிகா லட்சணம்.  அம்பிகையின் இடை கொடி போன்ற ரோம வரிசையினை தாங்கும் இடமாகும்.

அந்த இடை மெல்லியதாக இருக்கிறதா? இல்லையா? என்று எண்ணத்தக்க நிலையில் உள்ளது. ஆனாலும் கொடி போன்ற ரோம வரிசைகள் தொடங்கும் இடம் ஒன்று உண்டு தானே. அதுவே இடை.  அந்த இடை கண்ணுக்குத் தெரியாமல் ஊகித்து அறியும் படி அவ்வளவு மெலிந்த சிறுத்த இடையாய் இருக்கின்றதாம்.

ஆத்மா சூட்சுமமானதும் கண்ணுக்குப் புலப்படாததும் ஆகும். ஆத்மாவை தியானத்தால் மட்டுமே உணரக்கூடியதாகும். இதுவே இந்த நாமத்தின் தாத்பர்யம்.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை "லக்ஷ்ய ரோம லதா தாரத ஸமுன்னேய மத்யமா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

34. நாப்யா லவால ரோமாலி லதாபல குசத்வயீ

நாப்யா லவால ரோமாலி லதாபல குசத்வயீ - நாபி என்ற பாத்தியிலிருந்து முளைத்தெழுந்த கொடி போன்ற மெல்லிய ரோம வரிசையின் உச்சியில் பழுத்த பழங்களை ஒத்த இரு ஸ்தனங்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha



சாமுத்ரிகா லட்சணப்படி பெண்களின் நாபியிலுருந்து, மேல் நோக்கி மெல்லிய ரோம வரிசைகள் காணப்படும். அவ்வரிசைகள் மார்பகங்களின் தொடக்கத்தில் முடியும்.

அவ்வாறே, அம்பிகையின் வயிற்றிலுள்ளக் கொப்புழானது குழியாக வட்டமான அழகிய பாத்தியைப் போல உள்ளது. அதிலிருந்து நெஞ்சுக் குழிவரை சன்னமாக நீண்டிருக்கும் மெல்லிய ரோம வரிசையானது அழகிய கொடியைப் போல காட்சி அளிக்கிறது. அவ்வளவு நுண்ணிய இடையை கொண்டவள். அம்பிகையின் ஸ்தனங்கள் இரண்டும் அக்கொடியின் உச்சியில் பழுத்த இரு பழங்களைப் போல இருக்கின்றது.

மேலும், குண்டலினி யோக சாஸ்திரப்படி, நாபி மணிபூரகச் சக்கரமாகவும், ஹ்ருதயம் அநாகத சக்கரமாகும். ஹ்ருதய சக்கரத்தினை தியானிக்கும் போது குண்டலினி நாபியில் இருந்து எழுந்து வந்து அநாகதத்தில் மலர்வதாக தியானிக்க வேண்டும்.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை "நாப்யா லவால ரோமாலி லதாபல குசத்வயீ" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

33. காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண ஸ்தநீ

காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண   ஸ்தநீ - ரத்தினக் கலசம் போன்ற தனது ஸ்தனங்களைக் கொடுத்து காமேஸ்வரனின் ப்ரேமையை விலைக்கு வாங்கியவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


காமேஸ்வரனின் அன்பை பெறுவதற்கு தனது இரு ஸ்தனங்களையும் அவருக்கு அளித்தவள் அம்பிகை. ஈசனின் நெஞ்சம் வலியது. காமனது வில்லுக்கு மயங்காத அவ்வலிய நெஞ்சை எளிதில் வாங்கி விட முடியாது. அவரது அன்பு என்னும் ஒரு ரத்தினத்தை பெறுவதற்கு தேவி தனது இரு ரத்தினமான திருமுலைகளைக் கொடுத்தாள்.

அம்பிகையின் திருமுலைகள் வெறும் மாம்ஸத்தால் ஆன கவர்ச்சி யூ ட் டு ம் அங்கம் அல்ல. திவ்ய மங்கள ரூபத்தில் பரஞானம், அபரஞானம் என்னும் இரண்டு வகை ஞானங்களே அவளது திருமுலைகளாக அமைந்துள்ளது.

அவ்விரு ஞானங்களையும் சிவார்ப்பனமாகக் கொடுத்து அவரது அன்பு என்னும் ரத்தின மணியை அம்பிகை வாங்கினாள் என்பதே உட்கருத்து.

அதாவது ஜகதாம்பிகையின் அன்புக்கு பாத்திரமான பக்தர்கள் செய்யும் பக்திக்கு பலனாக அருளினை இருமடங்காக தருகிறாள். தேவியின் திருமார்பை தியானம் செய்ய ஞானம் உண்டாகும்.

இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை " காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண   ஸ்தநீ " என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam


32. ரத்ன க்ரைவேய சிந்தாக லோலா முக்தா பலான்விதா

ரத்ன க்ரைவேய சிந்தாக லோலா முக்தா பலான்விதா - அசைகின்ற முத்துக்களுடன் கூடிய ரத்தினப்பதக்கமும் பொருந்திய அட்டிகை அணிந்தவள்.

Lalitha


க்ரீவம் என்றால் கழுத்து. க்ரைவேயம் என்றால் கழுத்தில் அணியும் ஆபரணம். அம்பிகை ரத்தின அட்டிகையும், முத்து மாலைகளையும் அணிந்திருக்கிறாள். இந்த ஆபரணங்கள் தேவியின் கழுத்தில் அசைந்துக் கொண்டிருக்கின்றன.

அம்பிகையின் முழு உருவத்தையும், அதாவது தலை முதல் பாதம் வரை த்யானிக்க முடியாத ஆற்றல் அற்ற கீழான பக்தர்கள் லோலா எனப்படுவர்.
தேவியை தலை முதல் பாதம் வரை த்யானிக்கும் ஆற்றல் பெற்ற உயர்ந்த பக்தர்கள் முக்தா எனப்படுவர்.

லலிதாம்பிகை இந்த லோலாக்களையும், முக்தாக்களையும் பதக்கங்களாகவும், முத்து மாலைகளாகவும்  அணிந்திருக்கிறாள்.  இந்த லோலாவும் முக்தாவும் அவரவர் தகுதிக்கு தகுந்தாற் போல் பலனை பெறுவர்.

அணிகலன்களை அலங்காரத்துக்காக  மட்டுமில்லாமல் நீதிகளை அறிவுறுத்தவும் அணிகிறாள் அம்பிகை. அதாவது அம்பிகை அணியும் முத்துக்களாக நாம் மாற வேண்டும் என்ற குறிக்கோள் நமக்குள் ஏற்பட வேண்டும். தேவியினிடத்தில்  அசைந்து கொண்டிருக்கும் ஆபரணம் நம் மனதினை குறிக்கும். தேவியை வணங்கும் போது நம் மனதில் எந்த ஒரு சலனமும் தோன்றாமல் மனதினை அவள் பக்கம் செலுத்த முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அம்பிகை ரத்னம் மற்றும் முத்து பதித்த ஆபரணங்களை அணிந்திருக்கிறாள் என்பதை வாக்தேவிகள் " ரத்ன க்ரைவேய சிந்தாக லோலா முக்தா பலான்விதா" என்று போற்றுகின்றனர்.

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

31. கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா

கநகாங்கத  கேயூர  கமநீய  புஜாந்விதா - பொன்னால் ஆன தோள் வளைகளை அணிந்தவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா



லலிதாம்பிகை சதுர் புஜங்கள் கொண்டவள். நான்கு தோள்கள். தோள்களில் தோள்வளைகள் அழகு செய்கின்றன. தேவி தன்னுடைய தோள்களிலும், புஜங்களிலும் அங்கதம் மற்றும் கேயூரத்தை அணிந்திருக்கிறாள்.

பொதுவாக போர்க்களம் புகுந்து எதிரியுடன் போரிடும் போது, கவசமாக அணியும் பாதுகாப்பு அணிகலன் அங்கதம் எனப்படும். தோள்களிலும், புஜங்களிலும் அழகூட்ட அணிவது கேயூரம் எனப்படும்.

 லலிதாம்பிகை பண்டாசுரனுடன் போரிடும் போது அங்கதம், கேயூரத்தையெல்லாம் அணிந்திருந்தாள். இந்த இரண்டு ஆபரணங்களும் தங்கத்தால் ஆனவை. இவை இரண்டும் வேறு வேறு வடிவாக  இருந்தாலும் ஒரே பொருளான தங்கத்தால் ஆனது. அது போல தான் உயிரினங்களின் தோற்றம் வேறானாதாக இருந்தாலும் அவற்றின் உள்ளிருக்கும் ப்ரம்மம் ஒன்றே என்பதே தாத்பர்யம்.

அம்பிகை இவ்வாறு பொன்னால் ஆன அங்கதம் மற்றும் கேயூரத்தை அணிந்திருக்கிறாள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "கநகாங்கத  கேயூர  கமநீய  புஜாந்விதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

30. காமேஸ பக்த மாங்கல்ய ஸூத்ர ஸோபித கந்தரா

காமேஸ பக்த மாங்கல்ய ஸூத்ர ஸோபித கந்தரா - காமேஸ்வரர் கட்டிய மங்கல நாணுடன் ப்ரகாசிக்கும் கழுத்தினை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


அம்பிகையின் கழுத்து பளபளக்கிறது. அதன் கூடுதலான பளபளப்புக்கு காரணம் காமேஸ்வரராகிய சிவனார் கட்டிய திருமாங்கல்யமாம்.

மாங்கல்யம் கட்டும் பழக்கம் வேத காலத்தில் இருந்ததில்லை. எனினும் தென்னாடுடைய சிவன் தாலி கட்டியே திருமணம் முடித்தார்.

ஆதிசங்கரர்  "அம்மா, உன் கழுத்திலுள்ள முன்று ரேகைகளும், சிவன் உனக்கு  திருமண நாள் அன்று  அணிவித்த  மங்கள  சூத்திரத்தின்  அடையாளம்  போலும்" என்று  கூறியிருக்கிறார்.

அம்பிகை சிவனார் கட்டிய மங்கள நாணை அணிந்திருக்கிறாள். அதனால் மூன்று கோடுகள் உண்டானதாம். சாமுத்ரிகா லட்சண படி நெற்றி, கழுத்து, இடை ஆகியவற்றில் மூன்று கோடுகள் இருந்தால் அது அவர்களுடைய பாக்யங்களை குறிக்கும்.

நெற்றியில் மூன்று கோடுகள் இருந்தால் அது பரம சௌபாக்யத்தை தரவல்லது என்பதால், மூன்று விதமான ரேகைகளும் தேவியினுடைய கழுத்தில் காணப்படுகிறது என்பது ஓர் ஆச்சர்யம் ஆகாது. ஏனெனில் தேவியின் ஸ்வரூப லட்சணங்களை கொண்டு தான் சாமுத்ரிகா லட்சணம் அமைந்துள்ளது. அம்பிகை நித்ய சுமங்கலி. அவளுடைய மாங்கல்யத்தை த்யானித்து வழிபட மங்களங்கள் கூடும்.

காமேஸ்வரர் கட்டிய மங்கள நாணுடன் விளங்குகிறாள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "காமேஸ பக்த மாங்கல்ய ஸூத்ர ஸோபித கந்தரா" என்று போற்றுகின்றனர்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Aug 5, 2017

29. அநாகலித ஸாத்ருஸ்ய சிபுகஸ்ரீ விராஜிதா

அநாகலித ஸாத்ருஸ்ய சிபுகஸ்ரீ விராஜிதா - உவமையற்ற அழகு வாய்ந்த முகவாய் கட்டின் எழிலுடன் விளங்குபவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா



சிபுகம் என்றால் முகவாய். அம்பிகையின் முகம் கண்ணாடி என்றால் அவளுடைய முகவாய் அதன் கைப்பிடி என்று ஆதிசங்கரர் கூறுகிறார்.

அம்பிகையின் முகவாய் கட்டையின் அழகிற்கு இணையாக உவமை சொல்வதற்கு தகுந்த பொருள் உலகில் ஒன்றுமே இல்லையாம். அவ்வளவு அழகு வாய்ந்த முகவாய் கட்டையை உடையவள் என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை  "அநாகலித ஸாத்ருஸ்ய சிபுகஸ்ரீ விராஜிதா" என்று போற்றுகின்றனர்.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam



Jul 18, 2017

28. மந்தஸ்மித பிரபா பூர மஜ்ஜத் காமேச மாநஸா

மந்தஸ்மித  பிரபா பூர மஜ்ஜத் காமேச மாநஸா - புன்சிரிப்பின் ஒளிப்பிரவாகத்தில் காமேசுவரரின் மனம் முழுகிக் கொண்டிருக்கச் செய்தவள்.
ஸ்மிதம் என்றால் சிரிப்பு என்று பொருள். மந்த ஸ்மிதம் என்றால் மயக்குகின்ற சிரிப்பு என்ற பொருளாகும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha

லலிதாம்பிகை  அக்னிக்குண்டத்தில் இருந்து வெளிப்பட்டவுடன், சிவனும் காமேஸ்வரராக தோன்றினார். அம்பிகை தோன்றும் போது அவளுடைய புன் சிரிப்பின் அழகொளியானது பெருகி ஓடுகின்றது. அப்போது காமேஸ்வரனின் மனம் அந்த பெரும் ஒளி வெள்ளத்தில் மூழ்கி, அதிலிருந்து வெளி வர முடியாமல் அதிலேயே திளைத்திருக்கின்றதாம்.
ஆதிசங்கரரும் அம்பிகையின் புன்சிரிப்பை அமுதம் போன்ற முழு நிலவின் கிரணங்கள் என்று போற்றுகிறார்.
அம்பிகை தன் வசீகர புன் சிரிப்பால்,  பக்தர்களை கவர்ந்து அவர்களுக்கு ஞானம் அளித்து, இறுதியில் முக்தியை தருகிறாள். இதனைத்தான் வாக்தேவிகள் அம்பிகையை "மந்தஸ்மித  பிரபா பூர மஜ்ஜத் காமேச மாநஸா" என்று போற்றுகின்றனர்.
காஞ்சி  மூக கவி அன்னை காமாட்சியின் புன்முறுவலை வருணித்து 'மந்தஸ்மித சதகம்' என்னும் தலைப்பில் நூறு பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Jul 15, 2017

27. நிஜ ஸல்லாப மாதுர்ய விநிர் பர்த்ஸித கச்சபீ:

நிஜ ஸல்லாப மாதுர்ய விநிர் பர்த்ஸித கச்சபீ: - தனது குரல் இனிமையால் சரஸ்வதியின் கச்சபீ வீணையை மதிப்பிழக்க செய்தவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


மிக உயர்ந்த வீணைகளுக்குப் பெயர்கள் உண்டு. விசுவாவசுவின் வீணையின் பெயர் ப்ருஹதீ. தும்புருவின் வீணை கலாவதீ. நாரதர் வீணை மஹதீ. அன்னை சரஸ்வதியின் வீணை கச்சபீ. இவை ஒன்றை விட ஒன்று உயர்ந்தது.
பொதுவாக இனிமையான இசையை தருவது வீணை. சரஸ்வதியோ 64 கலைகளுக்கும் அதிபதி.  அவளுடைய வீணை இசையின் இனிமையை சொல்லவா வேண்டும்? இனிமையிலும் இனிமையாக இருக்கும்.
ஒருசமயம் அன்னை லலிதாம்பிகை தன் பரிவாரங்கள் புடைசூழ வந்து அரியணையில் அமர்ந்தாள். சபையே ஆரவாரம் அடங்கி அமைதியாக இருந்தது. அப்போது,  சரஸ்வதி தனது கச்சபீ வீணையை எடுத்து இனிய நாதம் மீட்டினாள். உடனே அனைத்து தேவர்களும் மெய்மறந்தனர். அன்னை லலிதா பரமேஸ்வரி சரஸ்வதியை பாராட்ட விரும்பி, மெல்லத் தன் பூவிதழ் திருவாய் மலர்ந்து, ''ஸபாஷ்! " என்று உரைத்தாள். .
அம்பிகையின் குரல் இனிமை சரஸ்வதியின் வீணை நாதத்தைக் காட்டிலும் இனிமையாக ஒலித்தது.  குரலின் இனிமை  காந்தம் போன்ற கவர்ச்சியில் அண்டசராசரமும் ஒருகணம் அசையாமல் நின்றது. இதை உணர்ந்த சரஸ்வதி ஓடோடி வந்து அன்னையைப் பணிந்தாள். 
அம்பிகையின் குரல் மதுரமானது. உண்மையான இனிமையே அவளிடம் தான் இருக்கிறது. அவளின் பேச்சு இனிமையால் சரஸ்வதியின் வீணை ஒன்றுமில்லாமல் போய்விட்டது. இதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "நிஜ ஸல்லாப மாதுர்ய விநிர் பர்த்ஸித கச்சபீ: " என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Jul 14, 2017

26. கற்பூர வீடிகா மோத ஸமாஹர்ஷ திகந்தரா

கற்பூர வீடிகா மோத ஸமாஹர்ஷ திகந்தரா - கற்பூர வீடிகம் என்னும் தாம்பூல நறுமணத்தால் எத்திக்கில் உள்ளோரையும் ஈர்ப்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha



கற்பூர வீடிகம் என்பது நறுமணம் தரும் பொருட்களை கொண்டு செய்யப்படும் தாம்பூலம். அவற்றில் வெற்றிலை, பாக்கு, ஏலம், பச்சைக் கற்பூரம், லவங்கம், குங்குமப்பூ, கஸ்தூரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி போன்ற பொருள்கள் சேர்க்கப்படும். இந்த கற்பூர வீடிகத்தை அம்பிகை சுவைக்கிறாள்.
மேலும், அம்பிகை இந்த கற்பூர வீடிகத்தை சுவைக்கும் போது வரும் வாசனை இந்த ப்ரபஞ்சத்தையே நறுமணமாக்குகிறது. அதனால் திசையெங்கும் நறுமணம் பரவுகிறது. அத்துடன், அந்த நறுமணமானது அனைவரையும் ஈர்க்கிறது.
அதாவது, அறியாமை உடைய மனிதனை அறிவாகிய வாசனையால் கவர்கிறாள் அம்பிகை. புத்தி உடைய மனிதன் தனது பக்தியால் அம்பிகையை அடைகிறான். ஆனால் அறிவு இல்லாதவனோ அம்பிகையை அடைவதற்கு ஒரு உந்துகோல் தேவைப்படும். அந்த உந்துகோலே தேவியின் தாம்பூல வாசனை. அந்த வாசனையே எத்திக்கில் உள்ளோரையும் அவள் பக்கம் சேர்த்துவிடுமாம்.
அதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "கற்பூர வீடிகா மோத ஸமாஹர்ஷ திகந்தரா" என்று போற்றுகின்றனர். மேலும் அம்பிகையின் தாம்பூல ரஸத்தை பருகியவர்கள் மிகப்பெரிய கவிஞர்களாவார்கள்.
திருவானைக்காவலில் அருள் புரியும் அகிலாண்டேஸ்வரி அம்மையின் தாம்பூல ரஸத்தை உண்டுதான் காளமேகம் பெரும் கவிஞர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Jul 13, 2017

25. சுத்த வித்யாங்குராகார த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா

சுத்த வித்யாங்குராகார த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா - சுத்த வித்தையே முளைத்தாற் போன்ற இரு பல் வரிசைகளை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


த்விஜ என்பது இரண்டு முறை பிறப்பதற்குப் பெயர். பல், பறவை, அந்தணன் ஆகியவர்கள் இருப்பிறப்பாளர்கள். பால்பற்கள் விழுந்து புது பற்கள் முளைக்கும். பறவை முட்டையிட்டு பின் குஞ்சுப் பொரிக்கும். அந்தணன் பிறந்து பின் உப நயனம் செய்யும் போது மீண்டும் பிறந்ததாகவே அர்த்தம். ஆக இவையெல்லாம் 'த்விஜம்' என்று பெயர்.

மேலும், அம்பிகையின் பற்கள் சுத்த வித்தை போல் உள்ளதாம். சுத்த வித்தை என்றால் ஸ்ரீவித்தையை குறிக்கிறது. ஸ்ரீவித்தை என்பது ஸ்ரீலலிதாம்பிகையின் மிகவும் சக்தி வாய்ந்ததும், மிகவும் ரகசியமானதுமான பூஜை முறைகளை கொண்ட சாதனை முறை. இந்த பூஜா முறைகள் எளிதில் யாருக்கும் கிடைக்காது. அவற்றை ஸ்ரீவித்யா குரு மூலமாகவே அறிய முடியும். ஸ்ரீவித்யா பூஜா முறைகளை கற்றவன் சாக்ஷாத் அம்பிகையே. சுத்த வித்தை என்பது தூய்மையான அறிவு.

ஸ்ரீவித்தைக்கு விதையாக விளங்குவது ஷோடஷி மந்திரம். ஷோடஷி  மந்திரம் 16 அக்ஷரங்களை கொண்டது. இந்த விதை முழைக்கும் போது இரு இலைகளாக உருவெடுக்கிறது. ஒரு இலையில் 16 வீதம் 16×2=32 ஆகிறது. இந்த ஷோடஷாக்ஷரி அக்ஷரங்களே  அம்பிகையின் த்விஜ பங்க்தி பல் வரிசைகளாக இருக்கிறதாம்.

அவள் பல் வரிசைகளே நமக்கு ஞானத்தை, நல் அறிவை கொடுக்கும். ஞானம் வருவதே மனிதனின் இரண்டாவது பிறப்பாகும்.

அம்பிகையின் த்விஜ பங்க்தி பல் வரிசை, சுத்த வித்தை முளை விட்டதைப் போல் அமைந்துள்ளதால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "சுத்த வித்யாங்குராகார த்விஜ பங்க்தி த்வயோஜ்வலா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Jul 12, 2017

24. நவ வித்ரும பிம்ப ஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா

நவ வித்ரும பிம்ப ஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா - புதிய பவளம், கோவை பழம் இவற்றை பழிக்க செய்யும் உதடுகளை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


சாதாரணமாக உதட்டின் சிவப்புக்கு பவழம், கோவைப்பழம் போன்றவற்றை உதாரணங்களாக காட்டுவார்கள். அதுவும் புதிய பவளம் மிகவும் சிவந்திருக்கும்.

மேலும், பிம்பம் என்றால் கோவை. பிம்பம் என்றாலே ப்ரதிபிம்பம் என்றும் அர்த்தம். அப்படித்தான் இந்த கோவைக்கும் பிம்பப் பேர் உண்டாயிற்று. அம்பிகை உதடுதான் அதற்கு மூல பிம்பம்.  அந்தக் காயின் பளபளப்பான தோலின்மேல்  அம்பிகை தன் உதட்டின் ப்ரதிபிம்பம் விழச்செய்து அதைச் செக்கச் சிவக்க ஆக்கி ‘பிம்பம்’ என்கிற பெயர் பெறும்படியாகப் பண்ணியிருக்கிறாள். இருந்தாலும் அதற்கு மூல பிம்பத்தின் சிவப்பு வரவில்லையாம். அவ்வளவு சிவப்பு வாய்ந்தது அம்பிகையின் உதடுகள்.

ஸ்ரீலலிதாம்பிகையின் உதடுகள் இந்த பவழம், கோவைப்பழ சிவப்பையெல்லாம் தோற்கடித்து விட்டதாம். அவளின் செவ்விதழ்கள் இயற்கை அழகும், மிகுந்த காந்தியும் உடையது. இதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "நவ வித்ரும பிம்ப ஸ்ரீ ந்யக்காரி ரதனச்சதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

23. பத்மராக சிலாந் தர்ஷ பரிபாவி கபோலபு:

பத்மராக சிலாந் தர்ஷ பரிபாவி கபோலபு: - பத்ம ராக கண்ணாடியை தோற்கடிப்பதுப் போன்ற பளபளப்பான கன்னங்களை உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


மாணிக்ய கற்கள் நான்கு விதம்.  விப்ரா,குருவிந்தா,ஸௌகந்திகம் மற்றும் மன்ஸ கண்டா. அவற்றுள் பத்மராக கல்லும் ஒரு விதமான மாணிக்க கல்தான்.

தேவி லலிதாம்பிகை செந்நிற மாணிக்ய கற்களை பதித்த காதணிகளை காதுகளில் அணிந்திருக்கிறாள். காதணிகளின் மாணிக்ககற்கள் செந்நிறத்தை பிரதிபலிப்பதனால் கன்னங்களும் செந்நிறமாக  காட்சியளிக்கிறது.

மேலும் தேவியின் நிறமே சிவப்பு தானே! சிவப்பு கருணையின் நிறம். சந்திரன், சூரியன் மற்ற ஆபரணங்கள் எல்லாம் தேவியின் உடலை அலங்கரிப்பதால் அம்பிகை செந்நிறமாகவே காட்சியளிக்கிறாள்.

தேவி லலிதாம்பிகையின் கன்னங்கள் மிருதுத் தன்மையுடையதும், பளபளப்பாகவும்  இருக்கின்றது. அவளது கன்னங்கள் பத்ம ராக கற்கள் போன்று சென்னிறமாக பளபளக்கின்றன என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "பத்மராக சிலாந் தர்ஷ பரிபாவி கபோலபு:" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam



Jul 10, 2017

22. தாடங்க யுகளிபூத தபநோடுப மண்டலா

தாடங்க யுகளிபூத தபநோடுப மண்டலா - சூரிய சந்திர மண்டலங்களயே இரு தோடுகளாக உடையவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


தபனன் என்றால் சூரியன், உடுபன் என்றால் சந்திரன். அம்பிகை தனது இடது காதில் சந்திரனையும் வலது காதில் சூரியனையும் தாடங்கங்களாக அணிந்திருக்கிறாள்.

அக்கால பெண்கள் காதில் பனை ஓலையை தான் காதணியாக அணிந்தனர். இன்றும் அம்பிகைக்கு காதோலையும் கருகுமணியும் வைத்து வழிபடும் வழக்கம் உண்டு.

தாலி, தோடு இரண்டும் விசேஷமான ஸெளமாங்கல்யா ஆபரணங்களாகும். அதுவும் அம்பிகையின் தாடங்கத்திற்கு வெகு சிறப்பு உண்டு.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, ஆலகால விஷம் வந்தது.  சிவபெருமான் அந்த விஷத்தை அப்படியே விழுங்கிவிட்டார். பின்னர் தேவர்கள் அமுதத்தை அருந்தினர். அந்த அமுதம் உண்ட தேவர்கள் கூட ப்ரளய காலத்தில் அழிந்து போனார்கள். ஆனால் நஞ்சை உண்ட சிவபெருமான் அழியவில்லை. அதற்கு காரணம் என்ன என்றால் அம்பிகையின் காதுகளில் உள்ள தாடங்கத்தின் மேன்மையே.

அம்பிகையே மங்களமானவள். ஸர்வ மங்கள மாங்கல்யே என்றே அவளை போற்றுவர். மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி. அவளுடைய சௌமங்கலியத்துக்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்? இதனால்தான் அவளுடைய தாடங்க மகிமையால்,  ஆலகால விஷம் சாப்பிட்டுகூடப் பரமேசுவரன் சௌக்கியமாகவே இருக்கிறார்.

இதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "தாடங்க யுகளிபூத தபநோடுப மண்டலா" என்று போற்றுகின்றனர்.

மேலும், திருக்கடவூரில் அபிராமி பட்டருக்கு ஆடி அமாவாசை அன்று தனது இடது காதில் உள்ள சந்திரனை வீசியே முழு நிலவை காட்டினாள் என்பது குறிப்பிடத்தக்கது.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam



21. கதம்ப மஞ்ஜரி க்லுப்த கர்ண பூர மனோஹரா

கதம்ப மஞ்ஜரி க்லுப்த கர்ண பூர மனோஹரா -மனதை கவரும் அழகுடன் கதம்ப பூவை செவிப் பூவாக உடையவள்.



🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha

மஞ்சரி என்றால் பூங்கொத்து என்று பொருள். பழமைக் காலத்தில் பெண்கள் இயற்கையான மலர்களை கொண்டு அவர்கள் காதுகளை அலங்கரித்துக் கொள்ள விரும்புவதுண்டு.

காது மடல்களின் கீழ்ப்பகுதியில் அணிவது தோடு. அங்கிருந்து மேல் நோக்கி வரிசையாக சிலபேர் துளையிட்டு அதில் நகை போடுவதுண்டு. அந்த மாதிரி அணிய கூடியது தான் செவிப்பூக்கள்.

அம்பிகை ஸ்ரீபுரத்தில் உள்ள கதம்ப மரத்தின் பூங்கொத்தினை செவிப்பூவாக அணிந்திருக்கிறாள். அந்த செவிப்பூவும் அதன் நறுமணமும் பார்ப்பவரின் மனதை கவர்கிறதாம். அந்த பூக்களானது அம்பிகையின் செவியில் பட்டதாலே மிகுந்த தெய்வீக நறுமணத்தை பெறுகிறது. இதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "கதம்ப மஞ்ஜரி க்லுப்த கர்ண பூர மனோஹரா" என்று போற்றுகின்றனர்.



🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam

Jul 8, 2017

7. சதுர்பாஹு சமன்விதா

சதுர்பாஹு சமன்விதா - நான்கு கரங்களை கொண்டவள்.



🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

லலிதா


இங்கிருந்துதான் அன்னையின் ரூப லாவண்யத்தை சொல்ல ஆரம்பிக்கிறார்கள் வாக்தேவிகள் .

எந்த ஒரு தெய்வ திருமேனியை பார்க்கும் போது சாதாரணமாக எல்லோரும் பார்ப்பது ஒரு கரம் அபய ஹஸ்தமாகவும், மற்றொரு கரம் வர ஹஸ்தமாகவும் இருக்கும். அவை மரண பயத்தை போக்கவும், வரத்தை அருளவும். நாம் அம்மா என்று அவள் கால்களில் விழும் போது அந்த பயத்தை அபய ஹஸ்தம் கொண்டு போக்குகிறாள். அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கும் போது வர ஹஸ்தம் நமக்கு வரத்தை அளிக்கிறது.
ஆனால் லலிதாம்பிகையிடம்  அபய - வர ஹஸ்தம் இருக்காது. ஏனெனில் அவள் திருவடிகளே பயத்திலிருந்து காத்து விடுகிறது. அத்திருவடிகளே அவரவர் விரும்புவதற்கு அதிகமாக வரமும் அளித்து விடுகிறது.அபய - வர ஹஸ்தம் காட்டி ஆள வேண்டிய அவசியம் உனக்கு இல்லை அதனால் தான் உன் திருக்கரங்களில் அதற்கான அடையாளம் இல்லை" என்று ஆதிசங்கரர் சொன்னார். குழந்தைக்கு தேவயானதை தேவையான நேரத்தில் கொடுப்பதற்கு தாய்க்கு தெரியாதா?
மேலும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும் அவளே அருள்கிறாள் என்பதை காட்டும் பொருட்டு நான்கு கைகளுடன் அம்பிகை விளங்குகிறாள். அதாவது நான்கு கரங்களை கொண்டவள் என்பதை தான்  சதுர்பாஹு சமன்விதா என்று வாக்தேவிகள் அம்பிகையை போற்றுகின்றனர்.



🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam





20. தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பூஷிதா

தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பூஷிதா - நக்ஷத்திரத்தின் ஒளியை தோற்கடிக்கும் பிரகாசத்தோடு கூடிய மூக்குத்தியினால் மிளிர்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


Lalitha


அம்பிகையின் மூக்குத்தியில் ஒன்று வெள்ளை கல்லால் ஆனது. மற்றொன்று சிவப்பு கல்லால் ஆனது. சிவப்புக் கல் மாணிக்கம் மற்றும் வெள்ளை கல் வைரம்.

தாரா என்பது மங்களா , சுக்லா ஆகிய இரண்டும் தேவதைகளை குறிக்கும். சுக்லா என்பது சுக்ரன் மற்றும் தாரா என்பது செவ்வாய். இந்த இரண்டு நக்ஷத்திரங்களும் அதிகம் மின்னுபவை.
மேலும் அம்பிகையின் மூக்குத்தியில்  சிவப்பு மாணிக்கம் செவ்வாயையும், வெள்ளை வைரம் சுக்ரனையும் குறிக்கின்றது.

வானில் சுக்ரன் வெண்மை ஒளியையும், செவ்வாய் சிவப்பு ஒளியையும் வழங்கும் சுடர்கள். அந்த இரு சுடர்களின் ஒளியையும் மிஞ்சி விடுகிறதாம் அம்பிகையின் இரண்டு மூக்குத்திகள்.
அதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பூஷிதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam




Jul 6, 2017

19. நவ சம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா

நவ சம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா - புதிதாக மலர்ந்த செண்ப பூப்போன்று ஒளிர்கின்ற மூக்குத் தண்டின் அழகுடன் திகழ்பவள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Lalitha


செண்பப் பூவானது மென்மை, நிறம், ஒளி, வடிவம் ஆகிய அனைத்தும் உடையது.  செண்பக பூவை பெண்களின் மூக்கிற்கு உவமை படுத்துவது உண்டு.

அம்பிகையின் நாசியும்(மூக்கு)  புதிதாக  மலர்ந்த செண்பக மலர்போன்று இருக்கின்றதாம். அது நாசியானது பிரகாசம் அடைந்தும் இருக்கிறது. அதனால் தான் வாக்தேவிகள் அம்பிகையை "நவ சம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா" என்று போற்றுகின்றனர்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam